மத்திய அரசுக்கு தொடரும் நெருக்கடி
காலத்தின் கட்டாயமாகிவிட்ட கூட்டணி ஆட்சியானது ஒவ்வொரு பிரதமருக்கும் கத்தி முனையில் நடப்பது போலத்தான். ஆனால் கடந்தநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியோ, அடுத்த மாதம்ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், கிட்டத்தட்ட ஒரு கட்சி ஆட்சியைப் போலவே இருந்து வந்தது. காரணம் காங்கிரஸ் கட்சி 207 இடங்களில் வெற்றி பெற்றதோடு, தேர்தலில் அதை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரியஜனதாதளம் போன்ற கட்சிகள் தாமாகவே முன்வந்து வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்ததால் மத்திய அரசுக்கு 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது தான். இதன் விளைவாக மத்திய அரசின் உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவுஉள்ளிட்ட முக்கிய துறைகளை காங்கிரஸ் தன்வசமே வைத்துக் கொண்டது. கடந்த முறையைப் போல அல்லாமல், காங்கிரஸ் கட்சி கொடுத்ததுறைகளைக் கொண்டே கூட்டணிக் கட்சிகள் திருப்தியடைய வேண்டியதாயிற்று. ஆட்சியிலும் கூட்டணிக் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தேனிலவுக் காலம் நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரோடு முடிவடைந்துவிட்டது.
மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு முதல் சோதனை மகளிர் இடஒதுக்கீடு மசோதா வடிவில் வந்தது. ஓட்டுகளைகவர்வதற்காக அரசியல் கட்சிகள் அவ்வப்போது கையில் எடுக்கும் ஆயுதமான மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தானும் கையில் எடுத்து காங்கிரஸ் கட்சி தன் கையை தானே சுட்டுக் கொண்டது. ஏறத்தாழ 12 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சில ஆதரவுக் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும், காங்கிரஸ் பிடிவாதமாக மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இதனைக் கவுரவ பிரச்சினையாகவே கருதிய காங்கிரஸ் கட்சி, பிஜேபி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன்மகளிர் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி, தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது. இருப்பினும் இதற்கான விலையாகசமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் கட்சி இழக்க நேரிட்டது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி, இந்த ஆண்டு இறுதியில் மேற்குவங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு, மகளிர் மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு வலியுறுத்தினார். அதேநேரத்தில், மசோதாவில் திருத்தம் செய்தால் அதற்கு ஆதரவு தர மாட்டோம் என பிஜேபி கூறிவிட்டதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கிவிட்டது.
மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றுவதையே லட்சியமாகக் கொண்டுள்ள மம்தாவோ மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதே இல்லை. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியைக் கண்டுகொள்வதே இல்லை. மம்தாவை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சிஏற்றுக் கொண்டுவிட்டாலும¢, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் தனக்கு கவுரமான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இரு கட்சிகளிடையே நீருபூத்த நெருப்பாக இருந்த மோதலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தரும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு எதுவரை நீடிக்கும்என்பதை உறுதியாகக் கூற முடியாது. உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வலுப்படுத்த ராகுல்காந்தி எடுத்து வரும் முயற்சிகளால்மாயாவதி ஏற்கனவே எரிச்சலடைந்துள்ளார். இந்நிலையில் கன்ஷிராம், மாயாவதி உள்ளிட்டோருக்கு பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்ததோடு, அண்மையில் மாயாவதிக்கு பணமாலை போடப்பட்டவிவகாரத்தையும் ஊதிப் பெரிதாக்கி விட்டது. இதனால் உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருக்கும் மாயாவதி, தனக்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதால், இனிமேல் மாயாவதி தனது திருவிளையாடலை ஆரம்பிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறாக நெருக்கடிகள் லேசாக துளிர்விட்ட நிலையில், ஐபிஎல் மோசடி விவகாரம் மத்திய அரசையே அசைத்துப்பார்த்துவிட்டது எனலாம். ஐபிஎல் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படும் சுவாரசியமான திருப்பங்களைப் போல, ஐபிஎல் மோசடி விவகாரத்திலும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருந்தன. கொச்சி அணி ஏலம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் தனக்கு தொடர்பே இல்லை என்று முதலில் மறுத்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசிதரூர், பின்னர் கேரளாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற ஆவலில் தான் கொச்சி அணியை ஏலம் எடுக்க உதவியதாக ஒத்துக்கொண்டார். சிக்கலில் இருந்து சசிதரூரைக் காப்பாற்றும் பொருட்டு அவரது தோழி சுனந்தா புஷ்கர், தான் இலவசமாக பெற்ற 70 கோடி ரூபாய் மதிப்புள்ள கொச்சி அணியின் பங்குகளை திரும்பக் கொடுக்க முன்வந்தார். இருப்பினும் பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைத் திருப்திப்படுத்த மத்திய அரசுசசிதரூரைக் காவு கொடுத்துவிட்டது. ஐபிஎல் விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை.
தேசியவாதக் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார்மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த, விமானப்போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரஃபுல் படேலுக்கும் ஐபிஎல் மோசடியில் தொடர்புஇருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான சரத்பவாருக்கு தற்போதும் அங்கே செல்வாக்கு உண்டு. ஐபிஎல் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் ஏலம் விடப்பட்டதில் சரத்பவாரின் பங்கு கணிசமாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. அதேநேரத்தில், கொச்சி அணி ஏலம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் பிரஃபுல் படேலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு, பயணிகள் விமான சேவைகளை நிறுத்திவிட்டு, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு விமானங்களை இயக்குமாறு ஏர்இந்தியா நிறுவனத்தை அவரது மகள் பூர்ணா படேல் நிர்ப்பந்தித்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
இப்படி நெருக்கடிகள் அதிகரித்து வந்த நிலையில் தான், டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மத்திய அமைச்சர்சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் ஆகியோரின் டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகாரப் போக்கை காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது நெருக்கடி கால இந்திராகாந்தி ஆட்சியை நினைவுபடுத்துவதாக குறை கூறியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் மோசடி, டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்துஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் எனறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனைக் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
இவ்வாறான நெருக்கடிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, எழுந்தது தான் நிதி மசோதா மீதான வெட்டுத் தீர்மானம். பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிகள், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், தெலுங்குதேசம், அதிமுக உள்ளிட்ட 13 கட்சிகள் இணைந்து கொண்டு வந்த இந்த வெட்டுத் தீர்மானத்திற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியும் ஆதரவு அளித்தது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஒத்த இந்த வெட்டுத் தீர்மானம் வெற்றி பெற்றால் மத்திய அரசு பதவி விலக நேரிடும். இந்த நெருக்கடியைத் தவிர்க்க மாயாவதி மீதான ஊழல் வழக்குகளில் அவருக்கு ஆதரவான நிலையை சிபிஐ எடுக்க வைத்ததன் மூலம், அதிருப்தியில் இருந்த மாயாவதியை காங்கிரஸ் கட்சி சமரசம் செய்தது. இதன் மூலம் நிதிமசோதா மீதான வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒத்துக் கொண்டதால், மத்திய அரசு ஒருவழியாகதப்பிவிட்டது.
கடந்த ஒரு ஆண்டு காலத்தில், பிற கட்சிகளை மதிக்காத காங்கிரசின் தன்னிச்சையான செயல்பாடு, நிதி மசோதா மீதான வெட்டுத்தீர்மானம் மூலம் பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டியுள்ளது. சில கூட்டணிக் கட்சிகளையும் எதிரிக் கட்சிகளாக்கிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எந்த நிலையிலும் உறுதியான ஆதரவை அளிக்கும் கட்சியாக தற்போதைய நிலையில் திமுக மட்டுமே உள்ளது. தலைமுறை மாற்றத்திற்கு தயாராகி வரும் திமுக, இலாகா ஒதுக்கீடு, ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளிலும் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடித்து, காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக சூழலைப் பராமரித்து வருகிறது.
நிதி மசோதா மீதான வெட்டுத்தீர்மானம் மூலம் பிஜேபியும், இடதுசாரிகளும் நெருங்கி வந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும், இது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை மணி. இனிமேலும், காங்கிரஸ் கட்சியால் முன்பு போல் தன் விருப்பப்படி ஆடமுடியாது. ஏனெனில் இதற்கு மேலும் கூட்டணிக் கட்சிகளை இழக்க நேரிட்டால், ஆட்சியையே பறிகொடுக்கும் நிலை ஏற்படும் என்பதால் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.