குறைந்து வரும் மக்கள் தொகை வளர்ச்சி
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய எட்டு நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பு ஜி-8. இது வளர்ச்சியடைந்த, தொழில்வள நாடுகளின் கூட்டமைப்பு. இது நாள் வரை உலக பொருளாதாரத்திலும், அரசியலிலும் இந்த நாடுகளே கோலோச்சி வந்தன. ஆனால் தற்போது உலகம் முழுவதும் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி இந்த நாடுகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிவிடும் என்றே தோன்றுகிறது. காரணம் ரஷ்யா தவிர்த்த ஏனைய நாடுகளின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேநேரம் அந்நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சியோ குறைந்து கொண்டே போகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய எட்டு நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பு ஜி-8. இது வளர்ச்சியடைந்த, தொழில்வள நாடுகளின் கூட்டமைப்பு. இது நாள் வரை உலக பொருளாதாரத்திலும், அரசியலிலும் இந்த நாடுகளே கோலோச்சி வந்தன. ஆனால் தற்போது உலகம் முழுவதும் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி இந்த நாடுகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிவிடும் என்றே தோன்றுகிறது. காரணம் ரஷ்யா தவிர்த்த ஏனைய நாடுகளின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேநேரம் அந்நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சியோ குறைந்து கொண்டே போகிறது.
ஆனால் இதற்கு நேர்மாறாக பிரிக் கூட்டமைப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் இந்த 21ம் நூற்றாண்டில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேவேளையில் இவற்றின் கடன்சுமையும் குறைந்து வருகிறது. இந்நாடுகளில் ரஷ்யா தவிர்த்த ஏனைய மூன்று நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. இது அந்நாடுகளின் மிகப்பெரிய பலமாகவும், அந்நாடுகளின் எதிர்காலத்தை கட்டியமைக்கும் சக்தியாகவும் கருதப்படுகிறது. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, முதல் உலகப்போருக்கு (1914) முன்பாக ஜெர்மனியில் ஏற்பட்ட வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி. இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கமே. இதே காரணத்திற்காக தான் முதல் உலகப்போரின் விளைவாக சீர்குலைந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 1930களுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவித்தார்.
மக்கள் தொகை வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறப்படுகின்ற வேளையில் இங்கே மக்கள் தொகை வளர்ச்சியை பலம் என்று கூறுவது நம்மில் பலருக்கு சந்தேகத்தை எழுப்பும். மக்கள் தொகை வளர்ச்சியின் விளைவாக இந்நாடுகளில் உழைக்கும் நிலையில் உள்ளோர் குறிப்பாக இளைஞர்கள் இந்நாடுகளில் அதிகம். இளைஞர்கள் அதிகமாக இருப்பது ஒரு நாட்டின் பலம் தானே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலோ நிலைமை நேர்மாறாக உள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவதோடு, மருத்துவ மேம்பாட்டினால் அந்நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, அதுவே பெரும் சுமையாக மாறி வருகிறது. ஆகவே பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டமிடலில் மிகப்பெரிய தடை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து ஏராளமான மக்கள் அமெரிக்காவில் குடியேறியதன் விளைவாக ஏற்பட்ட உழைக்கும் திறன் குறைபாட்டால் தான் கிபி 1873ம் ஆண்டு பிரிட்டனில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கழுத்தை நெரிக்கும் கடன் சுமை
ரஷ்யா தவிர்த்த ஏனைய ஜி-8 நாடுகளின் கடன் சுமை அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கில் கொள்ளும் போது மிகவும் அதிகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் பொருளாதார வல்லரசான அமெரிக்காவிற்கு 80%ம், ஜெர்மனிக்கு 77%ம், இத்தாலிக்கு 100%ம், ஜப்பானுக்கு 199%ம் கடன் சுமை உள்ளது. இதை விட அதிகமாக உலகில் ஜிம்பாப்வேக்கு மட்டுமே கடன் (218%) உள்ளது. அமெரிக்காவின் கடன் சுமை கடந்த செப்டம்பர் 2008க்கு பிறகு மட்டுமே 60%லிருந்து 80%ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் வளரும் நாடுகளில் இந்தியா மட்டுமே அதிக கடன் சுமை (58%) கொண்ட நாடாக உள்ளது. எதிர்கால பொருளாதார வல்லரசாக கருதப்படும் சீனாவின் கடன் சுமை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18%ஆக உள்ளது. பிரேசில் நாட்டின் கடன் சுமை 45%ஆகவும், இந்தோனேஷியாவின் கடன் சுமை 34%ஆகவும், தென்கொரியாவின் கடன் சுமை 28%ஆகவும் உள்ளது. சமீபத்திய பெட்ரோல் விலையேற்றத்தால் பெரிதும் லாபமடைந்த ரஷ்யா தனது கடன்களில் பெருமளவு அடைத்து விட்டது. அதன் தற்போதைய கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 6% மட்டுமே.
பொருளாதார நெருக்கடியின் தாக்கம்
பெருகி வரும் கடன்சுமை, குறைந்து வரும் மக்கள் தொகை ஆகிய இரட்டை தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள ரஷ்யா தவிர்த்த ஏனைய ஜி&8 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடந்த 18 மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 6.1%ம், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 9.6%ம், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 15%ம் குறைந்துள்ளது.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கார்களின் விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.2% அதிகம். இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் சில்லறை விற்பனை 15% அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7 அல்லது 8 சதவீத அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இந்தியாவில் 6%மாகவும், இந்தோனேஷியாவில் 4%மாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்த ஆண்டு அமெரிக்காவின் பட்ஜெட்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% அளவிற்கு பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை சீனாவிலோ 3%க்கும் குறைவாக மட்டுமே பற்றாக்குறை இருக்கும். பிரேசில் நாட்டிலோ பட்ஜெட்டில் உபரி நிதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக் உச்சிமாநாடு
இந்நிலையில் ரஷ்யாவின் யாகடரின்பர்க் நகரில் ஜுன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மற்றும் பிரிக் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கூட்டத்தில் நடப்பு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் பெருகி வரும் அமெரிக்காவின் கடன் சுமையையும், அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியையும் கருத்தில் கொண்டு டாலரின் பயன்பாட்டினை குறைத்துக் கொள்வது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் சுமார் 2 டரில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ள சீனா தற்போது தனது சேமிப்புகளை பல்வேறு வகைகளில் மாற்ற முயற்சிக்கிறது. முதல் கட்டமாக டாலருக்கு பதிலாக தனது நாணயமான யுவானிலேயே விலை நிர்ணயம் செய்ய பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் மூன்று வாரங்களுக்கு முன்னதாக மலேசியாவுடனும் இதேமாதிரியான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
உலகை சுற்றிலும் ராணுவ தளங்களை ஏற்படுத்தி, அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் அமெரிக்காவின் வலிமையான பொருளாதாரத்திற்கு முதுகெலும்பே அதன் நாணயமான டாலரின் உலக சேமிப்பு நாணய அந்தஸ்து தான். இதன் மூலமாக தான் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய நுகர்வோராக இருப்பது என்பதை ஏற்கனவே நமது முந்தைய பதிவில் பார்த்துவிட்டோம். தங்களை அச்சுறுத்தி வரும் அமெரிக்காவின் ராணுவ மேலாண்மையை தகர்க்கும் பொருட்டு, டாலரின் பயன்பாட்டை மட்டுப்படுத்துவது என ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளன. அதாவது தங்களிடையேயான வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது என அவை தீர்மானித்துள்ளன.
எந்தவொரு நாட்டையும் சாராத, தன்னிச்சையாக செயல்படும் உலக நிதி ஆணையம் மூலம் சர்வதேச வணிகத்திற்கான பொது நாணயம் வெளியிடப்பட்டு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து பிரிக் நாடுகளின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையை கொண்ட, மிகவும் வேகமாக வளரும், எதிர்கால பொருளாதார வல்லரசுகளாக கருதப்படும் பிரிக் நாடுகள் டாலரின் பயன்பாட்டை மட்டுப்படுத்துவது என தீர்மானித்தால் அதுவே இந்த நூற்றாண்டில் உலக அரசியலில் ஏற்படும் மிகப்பெரிய திருப்பமாக இருக்கும். ஏனெனில் அந்த முடிவு அமெரிக்காவை மையமாக கொண்ட தற்போதைய உலக பொருளாதார கட்டமைப்பை உடைப்பதாக அமையும். மேலும் அது அமெரிக்காவின் பொருளாதார, ராணுவ மேலாதிக்கத்திற்கு முடிவுரை எழுதுவதாகவும் இருக்கும்.




