
ஜூலை 21, 1969...
இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பொன்னாள். ஆம். அன்று தான் நிலவில் முதன் முதலாக மனிதன் தன் காலடியை பதித்தான். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய அப்பல்லோ&11 என்ற விண்கலத்தில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கி, தங்கள் நாட்டு கொடியை நட்டு வந்தனர். இந்த நிகழ்வு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்வும், 1968ம் ஆண்டு வெளிவந்த, விண்வெளி பயணத்தை கருப்பொருளாக கொண்ட "2001 A Space Odessey" என்ற திரைப்படமும் மக்களிடையே விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆவலையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தின. இதை தொடர்ந்து பல சர்வதேச நிறுவனங்கள் நிலவிலே சுற்றுப்பயணம் மேற்கொள்வது, நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுவது என்று வணிக ரீதியிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து, மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தின.
நாசாவும், சோவியத் யூனினும் போட்டி போட்டுக் கொண்டு தொடர்ச்சியாக நிலவிற்கு விண்வெளி கலங்களை அனுப்பி, அங்கு மனிதன் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வந்தன. நமது பாரதம் வரும் 2011ம் ஆண்டு நிலவிற்கு விண்வெளிக்கலம் அனுப்பும் சந்திரயான் திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. இவ்வாறாக சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நிலவை ஆய்வு செய்ய கிளம்பியுள்ளன. அதுசரி. நிலவில் மனிதன் கால்பதித்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், மீண்டும் மனிதனை நிலவிற்கு அனுப்பவில்லை? அல்லது நிலவிலே மனிதன் குடியேறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு தானே.
முதலில் மனிதன் உயிர்வாழ தேவையானவற்றையும் அவை நிலவிலே கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நாம் ஆய்வு செய்வோம்.
மனிதன் உயிர்வாழ பின்வருவன மிகவும் அவசியம்.
1. சுவாசிக்க காற்று (ஆக்ஸிஜன்)
2. நீர்
3. உண்ண உணவு
4. காற்று நிரப்பப்பட்ட அறைகள்
5. ஆற்றல்
ஆக்ஸிஜன்
பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி நிலவின் மண்ணில் ஆக்ஸிஜன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜனை வெப்பம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கலாம். ஆகவே நிலவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை.
நீர்
நாசா அண்மையில் அனுப்பிய புகைப்படங்களை ஆய்வு செய்தபோது நிலவின் தென்பகுதியில் நீரானது பனிப்பாறைகளாக உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் நிலவில் மனிதனுக்கு தண்ணீர் பற்றாக்குறையும் தீர்ந்துவிடும். மேலும் இந்த நீர் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளாக தனித்தனியே பிரித்தெடுத்து, ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை நிலவில் நீர் இல்லையெனில் நாம் பூமியிலிருந்து தான் நீரை நிலவிற்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம். ஏனெனில் ஒரு பவுண்ட் எடையுள்ள பொருளை பூமியிலிருந்து நிலவிற்கு கொண்டு செல்ல சுமார் 50ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். ஆகவே கேலன் (8 பவுண்ட்) நீரை நிலவிற்கு கொண்டு செல்ல கிட்டத்தட்ட 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இதற்கு மாற்றாக பூமியிலிருந்து நிலவிற்கு திரவ ஹைட்ரஜனை கொண்டு செல்லலாம். ஒரு நீர் மூலக்கூறில் 67% ஆக்ஸிஜனும், 33% ஹைட்ரஜனும் உள்ளது நமக்கு தெரியும். ஆகவே நிலவில் தாராளமாக கிடைக்கும் ஆக்ஸிஜனுடன் திரவ ஹைட்ரஜனை வினைபுரிய செய்து நமக்கு தேவையான நீரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த வினைவயின் போது நமக்கு மின்சக்தியும் கிடைக்கிறது.
உணவு
மனிதன் உயிர்வாழ தேவையான மற்றொன்று உணவு. ஒவ்வொரு மனிதனும் ஆண்டொன்றுக்கு 450 பவுண்ட் எடையுள்ள உணவை உட்கொள்கிறான். புவியில் நிலவும் உணவுச்சங்கிலியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு தேவையான உணவை முதல் நிலை ஆற்றல் உற்பத்தியாளர்களான தாவரங்களிலிருந்தே பெற்றுக் கொள்கின்றன. புவியின் வளிமண்டலத்திலுள்ள கார்பனும், நைட்ரஜனும், மண்ணில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புகளும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஜீவாதாரமான தாவங்கள் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

புவியின் ஈர்ப்புவிசையை காட்டிலும் நிலவின் ஈர்ப்புவிசை 6 மடங்கு குறைவு. இதனால் நிலவால் வளிமண்டலத்தை ஈர்த்து வைத்திருக்க முடியவில்லை. அதாவது நிலவில் வளிமண்டலம் இல்லை. அதுபோல் நிலவின் மண்ணில் தாவரங்கள் ஏதுவான தாதுஉப்புகளும் இல்லை. ஆகவே இந்த வேதிப்பொருட்களை புவியிலிருந்து தான் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. எனினும் இவற்றை நாம் ஒருமுறை மட்டும் கொண்டு சென்றால் போதும். உணவு தயாரிக்க மூலப்பொருட்களான வேதிப்பொருட்களையோ அல்லது நேரடியாக உணவையோ நிலவிற்கு கொண்டு சென்று விட்டால், பின்னர் மனிதனின் திட, திரவ, வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) கழிவுகளிலிருந்து, அதாவது இவற்றிலிருந்து தாவரங்கள் வளர தேவையான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதாவது நமது கழிவுப்பொருட்களே நமது உணவிற்கான ஆதாரப்பொருட்களாகின்றன. இதன் மூலம் உணவுச்சங்கிலி தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கும்.
வசிப்பிடம்
காற்று நிரப்பப்பட்ட, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறைகள் மனிதன் வாழ அவசியமாகிறது. தொடர்ந்து நடந்து வரும் ஆய்வுகளின் பலனாக செராமிக்ஸ் மற்றும் உலோகங்களை பயன்படுத்தி அத்தகைய அறைகளை நிலவில் நிர்மாணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
ஆற்றல்
நிலவிலே ஆற்றலை பெறுவது மனிதனுக்கு சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. சூரியனிலிருந்து ஆற்றலை பெற்றுக் கொள்ளலாம் என்றால், நிலவில் சூரிய ஒளி ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே கிடைக்கும். ஆகவே அது தவிர்த்து பிற நேரங்களில் ஆற்றலை பெறுவது சிக்கலாகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக நாம் ஏற்கனவே பார்த்தபடி திரவ ஹைட்ரஜனையும், நிலவின் மண்ணிலிருந்து பெறும் ஆக்ஸிஜனையும் வினைபுரியச் செய்து நீரை தயாரிக்கும் போது, நாம் பகுதி விளைவாக மின்சக்தியை பெறலாம். இதன் மூலம் நமது ஆற்றல் தேவையை ஈடுசெய்யலாம். மாற்று ஏற்பாடாக நிலவில் அதிகமாக கிடைக்கும் யுரேனிய படிவுகளை பயன்படுத்தி அணுஆற்றல் தயாரிக்கும் திட்டமும் உள்ளது.
நிலவில் மனிதன் குடியேறாமைக்கான காரணங்கள்
நிலவிலே குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் இருந்தும், மனிதன் ஏன் இன்னும் குடியேறவில்லை என்பது நம் முன் எழும் மிகப்பெரிய கேள்வி. அதற்கான விரிவான விளக்கத்தை பார்ப்போம்.
சுமார் 100 பேர் கொண்ட மனித குடியேற்றத்தை நிலவிலே ஏற்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தனி மனிதனையும், அவன் உயிர்வாழ தேவையான அடிப்படை பொருட்களையும் நிலவிற்கு எடுத்து செல்ல ஆகும் செலவுகளை முதலில் கணக்கிடுவோம்.
1. மனிதனின் எடை - 200 பவுண்ட்
2. வேதிப்பொருட்கள் (உணவு தயாரிக்க) - 500 பவுண்ட்
3. வசிப்பிடம் உருவாக்க தேவையான மூலப்பொருட்கள் - 1000 பவுண்ட்
4. உணவு மற்றும் வசிப்பிடத்தை உருவாக்க தேவையான பொருட்கள் - 1000 பவுண்ட்
ஆக ஒரு தனிமனிதனை நிலவிலே குடியேற்ற சுமார் 3000 பவுண்ட் எடையை நிலவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படியானால் 100 பேர் கொண்ட குடியேற்றத்தை உருவாக்க மூன்று லட்சம் பவுண்ட் எடையை நிலவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போது ஒரு பவுண்ட் எடையை பூமியிலிருந்து நிலவிற்கு எடுத்துச் செல்ல 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வீதம், மூன்று லட்சம் பவுண்ட் எடையை நிலவிற்கு எடுத்து செல்ல சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இது பூமியிலிருந்து நிலவிற்கு எடையை கொண்டு செல்ல ஆகும் செலவு மட்டுமே. மேலும் அவற்றின் உருவாக்கம், வளர்ச்சி, மூலப்பொருட்களின் விலை, மக்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் நிர்வாக செலவுகள் என அனைத்தையும் கூட்டி பார்த்தால் அது நூற்றுக்கணக்கான பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை தொட்டுவிடும். இப்போது புரிகிறதா நிலவிலே ஏன் இன்னும் மனிதனின் குடியேற்றம் அரங்கேறவில்லை என்று.
நிலவு ஆராய்ச்சி - அடுத்த கட்டம்
நிலவை ஆய்வு செய்யும் தனது ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிலவில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது மற்றும் மனிதனை குடியேற்றுவது குறித்த கால அட்டவணையை தொகுத்து, அதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டு நிலவிற்கு நான்கு விண்வெளி வீரர்களை அனுப்பி, அதற்கான முன்னேற்பாடுகளை துவக்க உள்ளது. நாசாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுமாயின், நிலவிலே மனிதன் விரைவில் குடியேறிவிடுவான்.
இன்று ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் விண்ணில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளும் மனிதன் நிலவிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் நாள் விரைவில் இல்லை. நிலவில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் மனிதன் பின்னர் தன் நிரந்தர குடியேற்றத்தையும் ஏற்படுத்துவான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில் இன்று நடக்க இயலாதது தான் நாளை சாத்தியமாகிறது. அதுவே பின்னர் வரலாறாகிறது. ஆகவே நிலவிலே காலடி பதித்துவிட்ட நாம் விரைவில் நிலவில் நமது குடியேற்றங்களை நிறுவுவோம். விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் புதுமைகள் பல படைப்போம்.
0 comments:
Post a Comment