பறக்கும் ஹோட்டல்



ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் வானில் பறக்கப் போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள "ஹோட்டலிகாப்டர்" என்று பெயரிடப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தான் அந்த பெருமையை பெற போகிறது. இது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பறப்பது போன்ற பரவச நிலையை ஏற்படுத்தப் போவது நிச்சயம்.

இந்த ஹெலிகாப்டரில் 8 பிரம்மாண்டமான ஆடம்பர அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அறைகள் ஒவ்வொன்றும் உயர் ரக படுக்கைகள், லினென் துணிகள், மினிபார், காபி மேக்கர், வயர்லெஸ் இண்டர்நெட் இணைப்பு என ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது. இந்த ஹெலிகாப்டரின் அறைகள் அனைத்தும் ஒலி உட்புகாத் தன்மை (Sound Proof) கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் புறப்பட்டதில் இருந்து அது தரையிறங்கும் வரை ஒரு மணிக்கொரு முறை ரூம்சர்வீஸ் முறையும் கடைபிடிக்கப்படுகிறது. ஏறத்தாழ ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் செய்யப்பட்டுள்ளன.

சோவியத் யூனியனின் தயாரிப்பான MI V-12 ஹெலிகாப்டரை மாடலாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ஏனெனில் வடிவம், திறன் உள்ளிட்ட பலவகைகளில் MI V-12 -ஐ ஹோட்டலிகாப்டர் ஒத்துள்ளது. இது 42மீ (137அடி) நீளமுடையது. இதன் உயரம் 28மீ (91அடி). இது அதிகபட்சமாக 1,05,850கிகி எடையை தாங்கக் கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 255கிமீ வேகத்திற்கு செல்லக்கூடியது. ஆனால் மணிக்கு 237கிமீ வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன தொலை தொடர்பு கருவிகள் மூலம் 515 கிமீ தூரம் வரை தொடர்பு கொள்ள முடியும். ஆனால் 1296கிமீ தூரம் வரை தொடர்பு கொள்ளும் வகையில் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கன்னிப்பயணம் வரும் ஜுன் 26ம் தேதி நியூயார்க் நகரின் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொடங்குகிறது. தொடக்க கோடை சுற்றுப்பயணம் ஜுலை 10ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. அடுத்ததாக ஜுலை 17ம் தேதி மீண்டும் 14 நாள் சுற்றுப்பயணமாக கலிபோர்னியா செல்கிறது. பின்னர் 16 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜுலை மாதம் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை ஜமைக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது.

இந்த சுற்றுப்பயணங்களுக்கான முன்பதிவு இப்போதே துவங்கிவிட்டது. இதற்கான கட்டணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் மிக அதிகமாகவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

0 comments:

Post a Comment