பண்டைய உலக அதிசயம் - கிசே பிரமிடு

பண்டைய உலக அதிசயங்களாக கருதப்படுவன ஏழு. அவற்றுள் இன்று வரை நிலைத்திருப்பது எகிப்தில் உள்ள கிசே பிரமிடு மட்டுமே.



பண்டைய எகிப்தியர்கள் மனிதனின் இறப்பிற்கு பின்னரும் வாழ்க்கை உண்டு என்று நம்பினர். ஆகவே எகிப்தியர்கள் இறந்த பிறகு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆபரனங்கள் ஆகியன இறப்பிற்கு பிந்தைய வாழ்விற்காக அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டன.

இறந்த பின்னரும் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையால் தான் எகிப்திய மன்னர்கள் இறந்த பிறகு, அவர்களது உடல்கள் பதப்படுத்தப்பட்டு இந்த பிரமிடுகளில் மம்மிக்களாக வைக்கப்பட்டன. மேலும் மன்னர் உயிரோடிருந்த போது அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் உள்பட தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றாலான விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றுடன் அவர்களின் மனைவியர், மந்திரிசபையினர், அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டனர். எகிப்திய மன்னர்கள் மட்டுமின்றி மகாராணி, மந்திரிகள், மதகுருமார்கள் ஆகிய அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப தனித்தனியே மன்னருக்கு அருகிலேயே பிரமிடுகள் கட்டப்பட்டன.

பிற்காலத்தில் இந்த பிரமிடுகளில் இருந்த விலை உயர்ந்த பொருட்களுக்காக அவை கொள்ளையடிக்கப்பட்டன. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு குழுக்கள் எகிப்து நாட்டிற்கு வந்து, அந்த பாலைவன மணலில் தங்க வேட்டை நடத்தினர். அவர்களில் சிலருக்கு தங்கப்புதையல் கிடைத்தது. ஆனால அங்கு நிலவிய மோசமான தட்பவெப்ப நிலையை தாங்க முடியாமல் பலர் மரணத்தையே தங்கள் தேடலின் பரிசாக பெற்றனர்.

இத்தகைய கொள்ளை சம்பவங்களின் மூலம் எகிப்து பிரமிடுகளில் இருந்த விலை மதிப்பு மிக்க பொருட்கள் சட்ட விரோதமாக பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டன. எகிப்தியர்களின் விலை மதிக்க முடியாத பண்டைய கலைக்களஞ்சியங்கள் காணாமல் போயின. இதன் காரணமாக பண்டைய எகிப்திய நாகரிகம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வுகள் போதிய பலனை தரவில்லை.

இந்த நிலையில் தான் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதாக கிசே பிரமிடு கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக அது கொள்ளையடிக்கப்படாமல் முழுமையாக இருந்தது. இதுதான இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரமிடுகளிலேயே மிகவும் பெரியது. மிகவும் பழமையானதும் கூட. கி.மு. சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. இது பண்டைய எகிப்து மன்னர் குபுவின் நினைவாக கட்டப்பட்டது. இதுதான் மனிதனால் கட்டப்பட்ட மிகவும் உயரமான கட்டிடமாக சுமார் 3800 ஆண்டு காலம் விளங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் உயரம் 146.6 மீட்டர். ஆனால் தற்போது இதன் வெளிப்புறப்பகுதி சிதைவடைந்துள்ளதால் சுமார் 138.8 மீட்டர் உயரமுடையதாகவே உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கமும் 230.5 மீட்டர் நீளமுடையது. இந்த பிரமிடின் மொத்த எடை சுமார் 59 லட்சம் டன்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க சுமார் 14 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

இந்த பிரமிடில் இருந்து குபு மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடல் (மம்மி) உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பண்டைய எகிப்தியர்களின் நாகரிகம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. இந்த பிரமிடின் வரலாறு குறித்து இதுவரை பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்துள்ளன.

இதுகுறித்து மேலும் விபரங்கள் அறிவதற்காக அப்துல்-ஹலிம் நூர்-எல்டின் தலைமையிலான எகிப்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில், கி.மு. 2470ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதி கிசே பிரமிடின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாவது:

தற்போது சிரியஸ் என்று அழைக்கப்படும் நட்சத்திரம் பண்டைய எகிப்தில் சோதிஸ் என்றழைக்கப்பட்டது. இந்த நட்சத்திரம், ஒவ்வொரு ஆண்டும் நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்திற்கு முன்னதாக அதிகாலையிலேயே வானில் தோன்றும். இதை கணக்கிட்டே பண்டைய எகிப்தியர்கள் நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படவிருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர் ஆற்றின கரையோரங்களில் படிந்திருக்கும் பிரஷ்சான புதிய மண்ணை கொண்டு தான் எகிப்தியர்கள் தங்களது முக்கிய கட்டிடங்கள், கல்லறைகள் (பிரமிடுகள்), கோவில்கள் ஆகியவற்றை கட்டுவது வழக்கம். ஏனென்றால் இது தான் வளமையின் அடையாளமாக கருதப்பட்டது.

பொதுவாக எகிப்திய மன்னர்கள் தங்களுக்கான கல்லறைகளை (பிரமிடு) தாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே கட்ட தொடங்கி விடுவர். ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்ட கிசே பிரமிடு குபு என்ற மன்னனுக்காக கட்டப்பட்டது.

இந்த மன்னர் கி.மு. 2470ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். ஆகவே அந்த ஆண்டே அவர் தனது கல்லறைக்கான (பிரமிடு) கட்டுமானப்பணிகளை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் புதிய மண்ணை கொண்டே பிரமிடுகள் கட்டுவது வழக்கம் என்பதால் அந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலம் தொடங்கிய பிறகு தான் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி இருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் நோக்கின், அந்த ஆண்டு சோதிஸ் நட்சத்திரம் ஜுலை 17 முதல் 19ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் தோன்றியுள்ளது. அதற்கு பின்னர் சரியாக 35 நாட்களுக்கு பிறகு அதாவது ஆகஸ்டு 23ம் தேதி தான் வெள்ளப்பெருக்கு காலம் தொடங்கியுள்ளது. ஆகவே கி.மு. 2470ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதி தான் கிசே பிரமிடு கட்டத் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வுக்குழு தலைவர் நூர்-எல்டின் தெரிவித்துள்ளார்.

ஆய்வுகள் தொடர்ந்து வருவதால் பண்டைய எகிப்திய நாகரிகம், அவர்களின் உயர்ந்த வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் சிறந்த மதிநுட்பம் ஆகியன குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவரக் கூடும்.

0 comments:

Post a Comment