உன்னைப் போல் ஒருவன்


திரையுலகில் பொன்விழா காணும் கமலஹாசன் நடித்து வெளிவந்துள்ள படம் உன்னைப் போல் ஒருவன். இந்த படம் குறித்து ஏற்கனவே பல வலைப்பதிவர்கள் தங்கள் பிளாக்குகளில் விமர்சனம் வெளியிட்டு விட்டனர். ஆகவே சன் டிவி டாப் டென்னில் கூறுவது போல ஏற்கனவே இதுகுறித்து தேவையான அளவு அலசப்பட்டு விட்டதால் நான் படம் குறித்த விமர்சனத்தை முன் வைக்காமல் அதுகுறித்த என் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உன்னைப் போல் ஒருவன் கதைக்களம் தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் கதை சொன்ன விதம் புதிது.

தீவிரவாதத்திற்கு சரியான தீர்வு தீவிரவாதமே என்று சொல்லியிருக்கிறார் கமல். அதாவது தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையோர், அவர்களது குற்றம் உறுதி செய்யப்படுமாயின் தயவு தாட்சண்யமின்றி கொல்லப்பட வேண்டும் என்பதே படத்தின் கதை.

கமல் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாகவே வருவது சிறப்பு. குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பெண்ணை கொல்லப்பட்ட காட்சியை அவர் சொல்லும் போது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் கண்ணீர் வருகிறது. கமல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை.

பொதுவாக கமல் படத்தில் அவரே மொத்த பாராட்டுகளையும் அள்ளி விடுவார். ஆனால் இப்படத்தில் மோகன்லாலுக்கு தான் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். கேரளத்தை சேர்ந்தவராக, சென்னை போலீஸ் கமிஷனராக மனிதர் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய மற்றொருவர் லட்சுமி. ஏனெனில் திரைக்கதை இவர்கள் மூவரையும் மையமாக கொண்டே பயணிக்கிறது. பழக்கப்பட்ட வேடம் என்பதால் அவர் மிகவும் எளிதாக ஸ்கோர் செய்து விடுகிறார்.

படத்தில் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டிய மற்றொருவர், என்னை மிகவும் கவர்ந்தவர் ஆரிப். போலீஸ் வேடத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார். அவரது பெர்சனாலிட்டி, கம்பீரமான உடற்கட்டு, கூர்மையான பார்வை என அனைத்துமே இன்றைய போலீசாருக்கு ஒரு பாடம். இறுதியில் தீவிரவாதிகளை கொன்ற பின்னர் உடன் வந்த அவரது நண்பரான மற்றொரு போலீஸ்காரர் அவரது கையில் சுடும் போது அவர் சற்றும் திகைப்பை வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக "சொல்லிவிட்டு செய்திருக்கலாமே" என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அசத்தியிருக்கிறார். இந்த காட்சியில் அவர் தன் நண்பர் மீதான நம்பிக்கையையும், காவல்துறை மீது அவருக்கிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வையும் ஒரே சமயத்தில் அற்புதமாக வெளிக்காட்டியிருப்பார்.

படத்தின் சிறப்பம்சங்கள்:

படத்தில் நிஜ முதல்வரின் வீட்டையும், அவரது குரலையும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. கமல் போன்ற ஜாம்பவான்களால் தான் இது முடியும்.

ஆக்ஷன் படமாக இருந்த போதிலும் படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் என எதுவுமே இல்லாமல் இருப்பது தமிழுக்கு புதிதான விஷயம் என்றாலும் பெரும் எதிர்பார்போடு படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தரக்கூடும்.

படத்தில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் சண்டைக்காட்சிகள் கிடையாது. நேற்று வந்த சின்னச்சின்ன நடிகர்கள் கூட சண்டைக்காட்சிகளை கட்டாயப்படுத்தி தங்கள் படங்களில் திணிக்கும் போது கமல், மோகன்லால் என இரு மெகா ஸ்டார்கள் இருந்தும் படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லாதது வியக்கத்தக்க விஷயம் தான்.

திரைக்கதையின் ஓட்டத்தை பாதிக்கும் விதத்திலான குத்துப்பாட்டுகள் படத்தில் கிடையாது. திரைக்கதை தெளிந்த நீரோடையாக செல்வது அருமை.

படத்தில் கமல், மோகன்லால் இருவருக்குமே ஜோடி கிடையாது. கமலின் மனைவி அவருடன் போனில் பேசுவதோடு சரி. காட்சிப்படுத்தல் இல்லை.

உன்னைப் போல் ஒருவன் - ஆர்ப்பாட்டமில்லாத ஒரு ஆக்ஷன் படம்.

0 comments:

Post a Comment