சமூகத்தை ஒன்றாக பிணைத்து வைத்திருக்கும் சக்தி உண்மையிலேயே அன்புதானா? கேள்விக்குரியது. நிலத்தின் மீதுள்ள மேடு, பள்ளங்களை பாய்ந்தோடி வரும் நதி வெள்ளம் மேவிச் செல்வது போல, மனித சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அடுத்தடுத்துள்ள அதிகார அடுக்குகளில் மனிதர்கள் சரியாகப் பொருந்துவதாலேயே அமைதி நிலவுகிறது.
உலகத்தில் எப்போதெல்லாம் அதிகாரச் சமநிலை குலைந்து போகிறதோ அப்போதெல்லாம் சமூகம் பேரழிவைச் சந்திக்கிறது.சமூகம் நிர்ணயித்துள்ள அதிகார அடுக்குகளில் பொருந்தாமல், சமூகத்தோடு பொருதி நிற்கும் மனிதர்களே மாற்றங்களுக்கு வித்திடுகிறார்கள். அவ்வாறான மனிதர்களில் ஒருசிலர் மட்டுமே சமூகத்தை மாற்றியமைத்து வரலாறாகின்றனர். பெரும்பாலானோரை இந்த சமூகம் தின்று செரித்துவிடுகிறது.
சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதரும் தத்தமக்கு இயன்ற அளவுக்கு தாக்கங்களை ஏற்படுத்தவே செய்கின்றனர். அந்த தாக்கத்தின் வீச்சு ஒரு வரையறைக்குட்பட்டது. பெரும்பாலானோரின் இருப்பு வெளியே தெரியும் அளவுக்கு அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் வீச்சு இருப்பதில்லை. பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ மாற்றத்தை ஏற்படுத்தியவர்களே இன்று நமக்கு வரலாறாகியுள்ளனர்.
உலகை மாற்றியமைத்தது தனி மனித ஆளுமைகளே அன்றி கொள்கைகளோ, கோட்பாடுகளோ அல்ல. சோவியத் யூனியனை கட்டியெழுப்பியது லெனினின் தனி மனித ஆளுமை என்றால், உலகின் முதன்மை வல்லரசாக சோவியத் யூனியனை மாற்றியது ஸ்டாலின் என்ற ஆளுமையும், அவரது சுய தேவைகளும், சொந்த விருப்பங்களுமே. கம்யூனிசத்திற்கு சக்தி இருந்திருந்தால், உண்மையில் மக்களை பிணைத்து வைத்திருந்தது கொள்கைதான் என்றால் சோவியத் யூனியன் இன்றும் உயிர் வாழ்ந்திருக்கும்.
ஒருவன் பிறக்கும் போதே அவன் மீது அதிகாரத்தின் நிழல் படிந்து விடுகிறது. வளர்ப்பும், இளமையும் இந்த சமூகத்தில் அவன் யார், அவனது பொறுப்பு என்ன என்பதை முளையிலேயே தீர்மானித்து விடுகின்றன.
அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் உண்மையான அன்பை ஒருவன் பெற முடியாது. மற்ற உறவுகள் அனைத்தும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை மையமாகக் கொண்டே அமைகின்றன. தேவைகளும், நிர்ப்பந்தங்களுமே உறவுகளைத் தீர்மானிக்கின்றன. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டால் உறவுகள் நிலைப்பதில்லை. நிலைமை இவ்வாறிருக்க, இதில் அன்பு எங்கிருந்து வந்தது?
0 comments:
Post a Comment