தேர்தலில் வாக்களித்து புதிய அரசை தேர்வு செய்வதாலேயே இந்தியா முழுமையான ஜனநாயக நாடாகிவிடுமா? ஆட்சி நடத்தும் முறை ஜனநாயகமய வேண்டாமா? இங்கு, முழுமையான நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிறதா?
ஒரு தேசத்தில் ஜனநாயகம் நிலவுகிறதா என்பதை அரசு என்ற நிர்வாக அமைப்பு, தேர்வு செய்யப்படும் முறை தீர்மானிப்பதில்லை. மாறாக, ஆட்சி முறை, ஆட்சியாளர்கள் செயல்படும் விதம் ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சர்வதேச உறவுகளையும், வெளிநாட்டு உடன்படிக்கைகளையும், பொருளாதார கொள்கைகளையும் மத்திய அமைச்சரவையே தீர்மானித்து விடுகிறது. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் அந்த முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கிடையாது என்பதால் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல் போய் விடுகிறது.
இந்தியாவில், நாடாளுமன்றம் வெறுமனே, ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் மன்றமாக மட்டுமே இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மத்திய அரசின் எந்தவொரு முடிவு குறித்தும் நாடாளுமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. தேவை ஏற்படும் போதெல்லாம், ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலே போதும். பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை சரித்திரம் நமக்கு ஏற்கனவே உணர்த்தியுள்ளது.
பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்படும் தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய, தகுந்த மாற்று ஏற்பாடுகள் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை என்பதை இந்திரா ஏற்கனவே நமக்கு நிரூபித்துவிட்டார்.
அதிகாரமும், பண பலமும் நீதித்துறையைக் கூட அசைத்துப் பார்த்து விடுகின்றன. ஐந்தாவது தூண் என்று பீற்றிக் கொள்ளும் வெகுஜன ஊடகங்களும், பத்திரிகைகளும் வருமானத்தைப் பெருக்கும் நோக்குடனே செயல்படுகின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்மையை துணிந்து கூறுபவை வெகு சிலவே. அவற்றையும், மக்களுக்கு எட்டா வண்ணம் செய்துவிட ஆட்சியாளர்களால் முடியும்.
நீதித் துறையும், அரசு நிர்வாக அமைப்புகளும் ஏழை குடிமகன்களுக்கு எட்டாத தூரத்திலேயே இருக்கின்றன. இந்த லட்சணத்தில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை வேறு. ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வது மட்டுமல்லாமல் ஆட்சி நடத்தும் முறையும் ஜனநாயகமயப்பட்டால் மட்டுமே அந்த வார்த்தை முழு அர்த்தம் பெறும். அதற்கு ஏற்ற வகையில் அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.
தாயன்பைப் போல இயற்கை விதிகள் மட்டுமே மாறாதவை. மனிதன் வகுத்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஜனநாயகம் ஒன்றும் சர்வரோக நிவாரணி கிடையாது. நிலை பேறானதும் கிடையாது. ஒவ்வொரு கால கட்டத்திலும், தகுதி படைத்த ஒருவன் தோன்றி புதிய விதிகளை படைத்துக் கொண்டேதான் இருக்கிறான்.
0 comments:
Post a Comment