இன்றைய கல்வியால் பயன் என்ன?


இன்றைய கல்வி முறை ஆண் - பெண் திருமண வயதை உயர்த்தியதைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறது?. இரண்டரை வயதில் பள்ளி என்னும் தொழிற்சாலைக்குள் திணிக்கப்படும் குழந்தை, பட்டதாரியானால் 21 வயதில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் ரோபோவாக வெளியே வருகிறது. 3 வயதில் வீட்டில் பெற்றோரை மகிழ்விக்க ரைம்ஸ் பாடியும், ஆடியும் காட்டும் அவன், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், தேர்வு போன்ற நிர்ப்பந்தங்களின் பேரில் செயல்படுகிறான்.


வீட்டில் வயதில் பெரியவர்களை மீறி அவனால் செயல்பட முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களைத் தாண்டி அவனால் சிந்திக்கக் கூட முடிவதில்லை. எப்போதும் பிறரின் கட்டளைக்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் காத்துக் கிடக்கும் ரோபோவாக மாற்றப்படும் அவன், அலுவலகத்திலும் உயர் அதிகாரிகளின் முட்டாள்தனங்களைக் கூட கண்மூடித்தனமாக செயல்படுத்துகிறான். பின்னர், வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் அவனை மீளவோ, திரும்பிப் பார்க்கவோ, குறைந்தபட்சம் மறு ஆய்வு செய்யவோ கூட முடியாத இடத்திற்கு இட்டுச் சென்று விடுகின்றன.

சுயமாக சிந்திக்கக் கற்றுத் தராத நமது கல்வி முறை தனி மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பதிலும் எதிரொலிக்கின்றன. ஆகவேதான், தேசத்தின் மீட்சிக்கான, மறுமலர்ச்சிக்கான திட்டங்களை நாம் அமெரிக்காவிலும், சோவியத் யூனியனிலும், ஐரோப்பாவிலும் தேடிக் கொண்டிருக்கிறோம். புதிய கோணங்களில் சிந்தித்து, வெவ்வேறு பரீட்சார்த்த முறைகளை தைரியமாக செயல்படுத்தும் தலைவர்களை உருவாக்க நமது கல்வி முறை தவறிவிட்டது.

தேசத்தின் இன்றைய தேவை ஆட்சி மாற்றம் அல்ல. புரையோடிப் போய்விட்ட காயத்தை, வெறுமனே பேன்டேஜை மட்டும் மாற்றுவதால் குணப்படுத்திவிட முடியாது. குழந்தை வளர்ப்பு, சுயமாக சிந்தித்துச் செயல்படும் ஆரோக்கியமான, பண்பட்ட மனிதர்களை தரும் சிறந்த கல்வி என மனித ஆளுமைகளை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக் கூடிய சமூகப் புரட்சியே இன்றைய தேவை.

0 comments:

Post a Comment