பெண்ணியம் எது?


பல ஆயிரம் ஆண்டு கால பண்பாடும், கலாச்சாரமும், நாகரிக வளர்ச்சியும் தந்தை, சகோதரன் ஆகிய 2 ஆண்களிடம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளன. பாரதம் மட்டுமே இன்னும் ஒரு படி மேலே போய், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை ஆணின் மனதில் ஆழமாக விதைப்பதன் மூலம் பெண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. தந்தை, சகோதரன் தவிர்த்த பிற ஆடவனுடன் தனித்து விடப்படும் போது, இயல்பாகவே பாதுகாப்பு தேடும் நிலைக்கு ஒரு பெண் தள்ளப்படுகிறாள். அதுபோன்ற தருணங்களில், அவளது பாதுகாப்பு உணர்வு விழித்துக் கொள்கிறது. 


என்னதான் பண்பாடும், கலாச்சாரமும் ஊட்டி வளர்க்கப்பட்டாலும், அதுபோன்ற தருணங்களில் ஆண்கள் சிலரிடம் மறைந்துள்ள மிருகத்தனம் வெளிப்பட்டு விடுகிறது. ஆகவேதான், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக நேரம், ஆடைக் கட்டுப்பாடு போன்றவை பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. முழு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லையென்றாலும் கூட வரவிருக்கும் ஆபத்தை கணிசமாகக் குறைக்க அவை உதவுகின்றன. 

பெண்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க நீங்கள் யார்? எங்களுக்கான உடையைத் தீர்மானிக்க உங்களுக்கு என்ன உரிமை? சமூகத்தின் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைபிடித்தும் சிலருக்கு கொடுமை நேரிடுகிறதே? என்று பெண்ணியவாதிகள் வாதிடலாம். என்ன செய்வது? தாறுமாறாக செல்லும் வாகனங்களால் சாலையோரம் நடந்து செல்பவர்கள் கூட சில நேரங்களில் காயமடைய நேரிடுகிறது. அதற்காக, நடுரோட்டில் நடந்து செல்ல முயன்றால் விளைவு என்ன? பாதிப்பு யாருக்கு? கனவுலகிலே சஞ்சரிக்கும் பெண்ணியவாதிகளின் தர்க்க வாதங்கள் நடைமுறை வாழ்க்கையில் துணை வருவதில்லை. 

பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பொறுப்பை கடவுள் பெண்ணிடமே கொடுத்துள்ளார். தன்னோடு, இன்னொரு உயிரையும் காப்பாற்றும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ள பெண்ணுக்கு இயற்கையிலேயே ஆணைக் காட்டிலும் போராட்டக் குணம் அதிகம். ஆனால், அழகு, மென்மை போன்ற ஆண் சமூகத்தின் வர்ணனைகளை ஏற்றுக் கொண்ட இன்றைய பெண்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தை, கணவன், மகன் என்று எப்போதும் ஒரு ஆண் மகனைச் சார்ந்திருக்க பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர். 

போராட்டக் குணம், வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனங்களை வீரம் என்ற பெயரில் ஆண்கள் இன்றும் போற்றி வருகின்றனர். எல்லா பிரச்னைகளுக்கும் ஆண்களையே சாடும் பெண்ணியவாதிகள், பெண்களின் போராட்டக் குணத்தையும், பிற நேர்மறை விஷயங்களையும் சுட்டிக்காட்டலாம், சுயசார்பை போற்றி வளர்க்கலாம். ஏனெனில், இந்த பூமியில் எதுவுமே சும்மா கிடைப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் நாம் ஒரு விலை கொடுத்தே தீர வேண்டும். 

புதுமைப் பெண்களாக வாழ விரும்பினால் முழுமையான சுயசார்பை நோக்கி நடை போட வேண்டும். விளைவுகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். இல்லையென்றால், பழமைவாதம், ஆணாதிக்க சமூகம் என்பன போன்ற பெண்ணியவாதிகளின் தேவையற்ற புலம்பல்களை கைவிட்டு, இச்சமூகம் வகுத்துள்ள நெறிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்களின் தேர்வு இரண்டாவதாகவே இருக்கிறது.

வண்டியில் டிரைவர் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு, பாதுகாப்பான இடம் தேடி அமர்ந்துவிடும் ஒருவருக்கு வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கும் உரிமை எவ்வாறு கிடைக்கும்?

0 comments:

Post a Comment