வன்முறையைத் தவிர்க்க இயலுமா?


மனித இனம் ஒவ்வொரு கால கட்டத்திலும் மூதாதையர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள், பண்பட்டவர்கள் என்று நினைத்துக் கொள்கிறது. ஆனால், விலங்கினங்களில் ஒன்றான மனித இனம், இயற்கை கொடுத்த, இயல்பாய் அமைந்த காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து ஒருபோதும் விடுபட்டதில்லை. அதன் வெளிப்பாடு வேறுவேறு வடிவங்களில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. எல்லா உயிரினங்களைப் போல மனிதர்களும் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள். 


உடல் எடையைத் தாங்கும் வேலையில் இருந்து விடுபட்டு கைகள் சுதந்திரமாக இயங்கியதும், மேம்பட்ட தகவல் தொடர்பும் மற்ற எல்லா உயிரினங்களையும் மனிதர்கள் வெல்லச் செய்தன. ஏன், ஐரோப்பியர் காலடி பதித்த இடங்களில் செவ்விந்தியர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் உலகம் முழுவதும் வேட்டையாடப்பட்டு, மனிதர்களில் ஒரு பகுதியினர் ஒழிக்கப்பட்டனர். ஆயுதங்களும், வழிமுறைகளும் மாறியதே தவிர வேட்டையாடும் காட்டுமிராண்டித்தனமும், வன்முறையும் மாறவே இல்லை. 

வாழ்வாதாரத்திற்கான தனி மனிதனின் போராட்டமே சண்டையாகிறது. இரு சமூகங்களுக்கு இடையிலான சண்டை போர் என்று அறியப்படுகிறது. எதிர்காலத்திலும், வாழ்வாதாரங்களுக்காக மனிதர்கள் போரிட வேண்டியிருக்கும். ஏனெனில், பூமியில் உள்ள வாழ்க்கை வளங்கள் அளவற்றதாக இல்லை. சூழலை எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள் அழிந்தே தீர வேண்டும் என்பது இயற்கை நியதி. பிரச்னைகளையும், சண்டைகளையும் சிறிது காலம் தள்ளி வைக்கலாமே தவிர, நிரந்தரமாக ஒதுக்கிவிட முடியாது.

0 comments:

Post a Comment