கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெடித்த, வீட்டுக்கடன் பிரச்சினையை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளால் அமெரிக்காவில் பெரும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. 158 ஆண்டு பெருமை வாய்ந்த லேமென் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச் மற்றும் பல மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் திவாலாகின. மிகப்பெரிய மியூச்சுவல் பண்ட் நிறுவனமான அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் போன்ற பல்வேறு நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் அமெரிக்க அரசின் தலையீட்டின் பேரில் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக சமீபத்தில் கடந்த ஜுன் முதல் தேதியன்று அமெரிக்காவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இதை தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரம் நிதி நெருக்கடியினால் தடுமாறி வருவது வெளிப்படையாகவே கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்க நாணயமான டாலரின் உலக சேமிப்பு நாணய அந்தஸ்திற்கு ஏதும் பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசு இந்த பொருளாதார பெருமந்தத்திலிருந்து மீண்டு வர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் டாலரின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. 21ம் நூற்றாண்டின் மத்தியில் டாலர் தனது உலக சேமிப்பு நாணய அந்தஸ்தை இழந்து விடும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் பலர் மதிப்பீடு செய்துள்ளனர்.
உலக சேமிப்பு நாணயம் (World's Reserve Currency)
உலகின் அதிகமான நாடுகளின் அரசு கருவூலங்களில் அன்னிய செலாவணி கையிருப்பாக எந்த நாட்டின் நாணயம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதோ அதுவே உலக பொது நாணயமாகும். உலகளாவிய வர்த்தகத்தில் தங்கம், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இந்த நாணயத்தின் அடிப்படையிலலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. இன்றைய உலகின் சேமிப்பு நாணயமாக அமெரிக்காவின் டாலர் திகழ்கிறது.
டாலர் உலக சேமிப்பு நாணயமான வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏறத்தாழ உலகின் அரைவாசி நாடுகளை தன்வசம் வைத்திருந்த இங்கிலாந்து நாடுகளிடையேயான வர்த்தகத்தில் தங்கத்தை பொதுநாணயமாக்கியது. இதன்படி, ஒவ்வொரு நாடும் கைவசம் வைத்துள்ள தங்கத்தின் அடிப்படையில் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதனால் தான் அந்நாட்டு நாணயத்திற்கு பவுண்ட் ஸ்டெர்லிங் என்ற பெயரே வந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனின் ஸ்டெர்லிங்கே உலக பொது நாணயமாக விளங்கியது. 1899ம் ஆண்டு உலக நாடுகளின் அன்னிய செலாவணி கையிருப்பில் ஸ்டெர்லிங் 64%ஆகவும், பிரான்சின் நாணயமான பிராங்க் 16%ஆகவும், ஜெர்மனி நாணயமான மார்க் 15%ஆகவும் இருந்தது. அதுவே 1913ம் ஆண்டில் ஸ்டெர்லிங் 48%ஆக குறைந்தது. அதேநேரத்தில் பிராங்க் 31%சதவீதமாக ஏற்றம் கண்டது. ஜெர்மனியின் மார்க் எந்தவித மாற்றமும் காணாமல் 15%ல் தான் தொடர்ந்தது. இந்த சமயத்தில் அமெரிக்காவின் டாலர் உலகின் எந்த ஒரு நாட்டின் கருவூலத்திலும் சிறிதளவு கூட சேமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் உலகப்போரில் தோல்வியுற்று, பொருளாதார ரீதியாக பலவீனமடைந்ததால் ஜெர்மனியின் மார்க் தனது மதிப்பை இழந்தது. அந்த இடத்தை அமெரிக்காவின் டாலர் பிடித்துக் கொண்டது. அது முதல் தான் டாலர் உலக நாடுகளின் அரசு கருவூலங்களை அலங்கரிக்க தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றொரு நிகழ்வு இரண்டாம் உலகப்போர். இதுவே உலகில் அமெரிக்க ஆதிக்கம் தோன்ற வழிவகுத்தது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா நடுநிலை வகித்து, தன்னை பெரும் சேதத்திலிருந்து காத்துக் கொண்டது. ஆனால் ஐரோப்பிய வல்லரசுளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி மற்றும் ஆசியாவின் ஜப்பான் ஆகிய நாடுகள் காலனி ஆதிக்கப்போட்டியால் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. இதில் நேச நாடுகள் என்றழைக்கப்பட்ட பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு தேவையான போர்க்கருவிகளையும், ராணுவ தளவாடங்களையும் இன்ன பிறவற்றையும் அமெரிக்காவிடமிருந்தே வாங்கின. இதனால் அமெரிக்காவின் தொழிற்சாலைகள் இரவு பகலாக இடைவிடாது ராணுவ தளவாட உற்பத்தியில் இறங்கின. இதனால் அமெரிக்காவில் உற்பத்தித்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதேவேளை அமெரிக்கா ஆயுதங்களை கொடுத்ததுடன், அவற்றிற்கு ஈடாக அந்நாடுகளிடமிருந்து தங்கத்தை வற்புறுத்தி பெற்றுக் கொண்டது.
இரண்டாவது உலகப்போரில் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேசநாடுகள் வெற்றி பெற்றாலும், போரால் அந்நாடுகள் பலவீனமடைந்திருந்ததால் அவற்றின் பிடியிலிருந்த உலக நாடுகள் விடுதலை பெற ஆரம்பித்துவிட்டன. மேலும் போரால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டதால் தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உலகின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ பாதியளவு அமெரிக்காவின் பங்களிப்பாக இருந்தது. மேலும் உலகின் தங்க கையிருப்பில் பெரும் பகுதி அமெரிக்காவின் வசமே இருந்தது. ஆகவே அதுவரை கோலோச்சி வந்த பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் ராணுவ, பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உயர்ந்தது.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர், உலகளாவிய நிதி மற்றும் வர்த்தக நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து விவாதிக்க அமெரிக்காவில் உள்ள நியூஹாம்ப்ஷயர் நகரில் பிரெட்டன்உட்ஸ் என்ற இடத்தில் 44 நாடுகளை சேர்ந்த 730 பிரதிநிதிகள் கூடினர். அக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையே பிரெட்டன்உட்ஸ் உடன்படிக்கை எனப்படுகிறது. இதன்படி, உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் வெளியில் புழக்கத்திற்கு விடும் நாணயத்திற்கு நிகராக தங்கத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும். இதன் சிறப்பம்சம் யாதெனில் டாலரின் மதிப்பு மாறாது. நிலையானது. உலகின் பிற நாடுகள் தங்கள் நாடுகளின் நாணய மதிப்பை டாலருக்கு நிகராக பராமரிக்க வேண்டும். அதாவது, ஒருநாட்டின் நாணயத்தின் மதிப்பு டாலரை விட உயர்ந்துவிட்டால், அந்நாட்டின் மத்திய வங்கி தனது நாட்டின் நாணயத்தை விற்று, அதற்கு ஈடாக டாலரை பெற்று தனது நாட்டின் நாணய மதிப்பை டாலருக்கு நிகராக்க வேண்டும். அதேபோல் டாலரின் மதிப்பை விட குறைந்து விட்டால், மத்திய வங்கி தனது நாட்டின் நாணயத்தை வாங்கிக் கொண்டு, தனது நாட்டு நாணயத்தின் மதிப்பை டாலருக்கு நிகராக அதிகரிக்க வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டில் அறுபதுகளின் இறுதியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து தங்கத்தை திருப்பிக் கேட்டன. ஆனால் அமெரிக்கா திருப்பித்தர மறுத்தது. மேலும் தங்கத்திற்கு பதிலாக டாலரை சேமிக்குமாறு அந்நாடுகளை வற்புறுத்தியது. மேலும் அமெரிக்காவில் அதிகரித்து வந்த வர்த்தக பற்றாக்குறையும், பணவீக்கமும் டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தின. இதுபோன்ற நெருக்கடிகளால் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் பிரெட்டன்உட்ஸ் உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக தன்னிச்சையாக அறிவித்தார். மேலும் தங்கத்திற்கு நிகராக டாலரின் பெறுமதியை நிர்ணயம் செய்வதிலிருந்து, தங்கத்தை கழட்டி விட்டது. அதேநேரம் சவுதி அரேபியாவை அணுகி அதன் பெட்ரோலலை டாலரில் மட்டுமே விற்பனை செய்ய சம்மதிக்க வைத்தது. 1971ம் ஆண்டிலேயே 'ஒபெக்' எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பையும் பெட்ரோலியப் பொருட்களுக்கு டாலரில் விலை நிர்ணயம் செய்ய சம்மதிக்க வைத்து விட்டது அமெரிக்கா. ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளும் எரிபொருள் தேவைக்காக இந்நாடுகளையே சார்ந்திருக்கின்றன. ஆகவே அனைத்து நாடுகளும் தங்கள் கருவூலங்களில் டாலரை சேமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறாக டாலர் உலக சேமிப்பு நாணயமாக உயர்ந்தது.
அமெரிக்காவிற்கான அனுகூலங்கள்
டாலரின் உலக சேமிப்பு நாணய அந்தஸ்தால் இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்கா வெறுமனே தனது டாலர் தாள்களை கொடுப்பதாலேயே எளிதாக பெற்றுக் கொள்கிறது. இதற்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு வெறும் காகிதத்தை அச்சிட ஆகும் செலவு மட்டுமே. இப்படித்தான் அமெரிக்கா பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொஞ்சமும் சிரமமில்லாமல் வாங்கிக் குவிக்கிறது. ஏனெனில் அனைத்து நாடுகளுக்கும் உலக வர்த்தகத்திற்கு டாலர் மிகவும் அவசியமாக இருப்பதால் இது மிகவும் எளிதாகிறது.
யூரோவின் வருகை
ஐரோப்பிய யூனியனை சேர்ந்த ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 16 நாடுகள் ஒருங்கிணைந்து 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி யூரோ என்ற நாணயத்தை வெளியிட்டன. இந்நாடுகள் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்து ''யூரோசோன்'' என்றழைக்கப்படுகின்றன. இது டாலருக்கு கடும் சவாலை ஏற்படுத்தியதற்கு காரணம் யூரோசோன் நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையும், அவற்றின் பொருளாதார வலிமையுமே. ஏனெனில் இந்நாடுகளின் ஒருங்கிணைந்த பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை விடவும் வலிமையானது. ஆகவே உலக நாடுகளால் யூரோ மிகவும் விரும்பப்பட்டது. அறிமுகமான ஆண்டில் உலக அன்னிய செலாவணி கையிருப்பில் 17.9%ஆக இருந்த யூரோ 2008ம் ஆண்டில் 26.5%ஆக உயர்ந்தது. அதேநேரம் டாலரின் அளவு 70.9%லிருந்து 64% சதவீதமாக குறைந்தது.
யூரோவுக்கு எதிராக அமெரிக்கா
ஐநா தீர்மானத்தையும் மீறி, பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறி கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. உண்மையில் இந்த போர் ஈராக் நாட்டிற்கு எதிரானதல்ல. ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக குறிப்பாக யூரோசோன் நாடுகளுக்கு எதிரான போரே. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது யூரோ நாணயத்திற்கு எதிரான போரே. அமெரிக்காற்விற்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான பொருளாதார ஆதிக்க போட்டியின் அப்பட்டமான வெளிப்பாடே ஈராக் மீதான போர்.
ஈராக் போருக்கான உண்மையான காரணம் அந்நாடு பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது அல்ல. மாறாக அது தனது பெட்ரோல் விற்பனையை கடந்த 2000வது ஆண்டு நவம்பர் மாதம் 6ம் நாள் டாலரிலிருந்து யூரோவிற்கு மாற்றியதே. ஆரம்பத்தில் இதை பெரிய விஷயமாக கருதாத அமெரிக்கா, பின்னர் தான் ஏற்படவிருந்த விபரீதத்தை எண்ணி விழித்துக் கொண்டது. ஏனெனில் ஈராக் எண்ணெய் விற்பனையை யூரோவில் லாபகரமாக செய்வதை பார்த்து, பிற நாடுகளும் யூரோவிற்கு மாறக்கூடும். இதனால் யூரோவின் மதிப்பு கூடும். மேலும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் யூரோசோனில் இணையலாம். இதனால் யூரோவின் மதிப்பு மேலும் நிலையாகவும், யூரோசோனின் பொருளாதாரம் வலிமையானதாகவும் மாறக்கூடும். இது உலகின் ஏனைய நாடுகளும் யூரோவிற்கு மாறுவதற்கு வழிவகுத்து விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அமெரிக்காவே திவாலாகி விடும். எப்படி தெரியுமா?
தற்போது உலக நாடுகள் தங்களது உற்பத்தி பொருட்களை அமெரிக்காவிடம் கொடுத்து, பதிலாக டாலரை பெற்றுக் கொள்கின்றன. பெட்ரோல் விற்பனையின் பலனாக அந்த டாலர் ஒபெக் நாடுகளிடம் சேர்கிறது. அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில் ஒபெக் நாடுகள் முதலீடு செய்வதன் மூலம் இந்த டாலர் தாள்கள் மீண்டும் அமெரிக்காவின் வசமே சென்று விடுகின்றன. இவ்வாறு எந்த ஒரு உழைப்போ, செலவோ இல்லாமல் அமெரிக்காவில் முதலீடுகள் குவிகின்றன. அந்த கடன் பத்திரங்களுக்கான பணத்தை திருப்பி செலுத்தும் கடமை அமெரிக்க அரசிற்கு உண்டு. ஆனால் அமெரிக்க அரசு ஒபெக் நாடுகளிடம் இந்த கடன் பத்திரங்களை செல்லுபடியாக்கும்படியான ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இதனால் இந்த கடன் பத்திரங்களை பெறும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுத்து ஈட்டுத்தொகை தருமாறு கோரியதில்லை. மாறாக உலக வர்த்தகத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால் அந்த கடன் பத்திரங்கள் பல்வேறு நாடுகளின் கைகளில் மாறிக் கொண்டே இருக்கிறது.
ஒருநாள் டாலர் திடீரென உலக சேமிப்பு நாணய அந்தஸ்தை இழந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் கருவூலங்களில் சேமித்து வைத்துள்ள டாலரை திருப்பி கொடுத்துவிடவே விரும்பும். அதுபோல் கடன் பத்திரங்களை தன்வசம் வைத்துள்ள நாடுகள் அவற்றை அமெரிக்க அரசிடம் கொடுத்து, அதற்கு ஈடாக பணம் பெற விழையும். ஆனால் அமெரிக்க அரசால் அது முடியாது. ஆகவே திவாலாவதை தவிர வேறு வழியில்லை. என்ன சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா திவாலாகும் என்பதை நம்ப முடியவில்லையா? இதை பின்வரும் உதாரணத்தின் மூலம் காண்போம்.
'A' என்பவர் ஒரு வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து விட்டு தன் வங்கிக்கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையிலும், ஒரு செக் கொடுக்கிறார். ஆனால் அவர் இனறியமையாத பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்களிடம் (பெட்ரோல், கியாஸ் விற்பனையாளர்கள்) ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். என்னவெனில் அந்த செக்கை அவர்களிடத்திலே செல்லத்தக்கதாக்கும் ஒப்பந்தமே அது. இதன் மூலம் அந்த செக் பணம் இல்லாமலேயே காய்கறி கடைக்காரர், மளிகை கடைக்காரர், பெரும் தொழிலதிபர்கள் என ஒருவர் மாறி மற்றொருவர் கைகளுக்கு சென்று கொண்டேயிருக்கிறது. இப்போது செக்கிற்கு மதிப்பிருந்தாலும் வங்கியில் பணம் அந்த கணக்கில் பணம் இல்லை. திடீரென ஒருநாள் 'A' உடன் ஒப்பந்தம் செய்தவர்களில் ஒருவர் செக்கை செல்லாததாக அறிவித்து விட்டார் என்றால், செக்கை வைத்திருப்பவர் 'A' யிடம் சென்று பணம் கேட்கிறார். இந்நிலையில் 'A' மிகவும் பலமானவர், செக்கை வைத்திருப்பவரும் பலமானவர் என்னும் நிலையில் அவரிடம் தனது வீரத்தை காட்ட இயலாமல், செக்கை செல்லாததாக அறிவித்தவரிடம் சென்று 'A' சண்டை போடுகிறார். இதுதான் ஈராக் விஷயத்தில் நடந்தது.
டாலருக்கு சவால்
வீட்டுக்கடன் பிரச்சினையை தொடர்ந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அமெரிக்கவில் நிதி நெருக்கடி அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தையும் பாதித்தது. ஏனெனில் உலகமயமாக்கலின் விளைவாக எல்லா நாடுகளின் பொருளாதாரமும் அமெரிக்கா பொருளாதாரத்துடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டுள்ளது. உலக பொருளாதாரம் அமெரிக்காவை மையமாக கொண்டது தான். அமெரிக்காவின் இன்றைய நெருக்கடி நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் "புதிய உலக பொது நாணயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அது பன்னாட்டு நிதி நிறுவனத்தால் பராமரிக்கப்பட வேண்டும். அது தனி ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடு இணைந்திருக்க கூடாது" என்று 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடந்த ஜி-20 மாநாட்டில் வலியுறுத்தின. உலக நாடுகள் இந்த திட்டத்தை ஏற்கா விட்டாலும் கூட, இக்கருத்து அந்நாடுகளிடையே புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபெக் நாடுகளும் கூட தங்களிடையே பொதுநாணயம் வெளியிட கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் எதிர்ப்புகளையும், ராஜதந்திரங்களையும் மீறி வரும் 2011ம் ஆண்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டால் அது உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அந்நாடுகள் டாலரில் பெட்ரோலுக்கான விலையை நிர்ணயம் செய்வதே டாலரின் செல்வாக்குக்கு காரணம். புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அந்த நாணயத்தில் அவர்கள் விலை நிர்ணயம் செய்ய முற்பட்டால் டாலரின் செல்வாக்கு ஒரே நாளில் சரிந்து விடும் என்பது தெளிவு. டாலரின் உலக சேமிப்பு நாணய அந்தஸ்தால் அமெரிக்க பொருளாதாரம் பெற்றுள்ள சாதகமான அனுகூலங்கள் பல நாடுகளின் கண்களை உறுத்தி வருகிறது.
டாலரின் எதிர்காலம்
உலக நாடுகளின் அன்னிய செலாவணி கையிருப்பு 1999ம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் 2006ம் ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 70% டாலர் தான். இது உலக பொருளாதாரத்தின் மீதான அமெரிக்காவின் பிடியை மேலும் இறுக்கியுள்ளது. மேலும் அன்னிய செலாவணி கையிருப்பில் முதலிடம் வகிக்கும் சீனாவும், ஜப்பானும் மற்றும் ஒபெக் நாடுகளும் டாலர் மதிப்பு குறைவதை ஒருபோதும் விரும்ப போவதில்லை. ஏனெனில் அந்த நாடுகளின் கருவூலங்கள் கழுத்துவரை டாலரால் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சீனா பெருமளவு முதலீடு செய்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானால் அது இந்நாடுகளையும் மிக மோசமாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக் அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவுடனான போருக்கு முன்பு வரை ஜெர்மனி, பிரான்ஸ் போன் ஐரோப்பிய வல்லரசுகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அது அமெரிக்காவின் தாக்குதலிலிருந்து தன்னை காக்கும் என்று அவர் நம்பினார். அந்தோ பரிதாபம்! பொருளாதார ரீதியாக தங்களுக்குள் ஒருங்கிணைந்த ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென ஒரு பொதுவான ராணுவ அமைப்பை கொண்டிராததால், அவற்றால் அமெரிக்காவை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த போரின் மூலம் யூரோவிற்கு மாற விரும்பிய நாடுகளுக்கு சரியான பாடம் புகட்டும் அமெரிக்காவின் எண்ணமும் ஈடேறி விட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய பலமே அதன் மிதமிஞ்சிய ராணுவ பலம் தான். அது தன் பொருளாதாரத்தை காக்க, டாலரை உலக சேமிப்பு நாணயமாக நிலைநிறுத்த போரில் ஈடுபடவும் தயங்காது என்பதையே இது காட்டுகிறது.
எதிர்காலத்தின் பொருளாதார வல்லரசாக கருதப்படும் சீனாவின் நாணயமான யுவானின் வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. அது இன்னும் வளர வேண்டியுள்ளது. மேலும் அந்நாட்டின் ஆட்சிமுறை, கட்டுப்பாடுகள் வெளிநாடுகளின் முதலீடுகள் குவிவதை தடுத்து வருகிறது. ஏனெனில் முதலீடு செய்யும் ஒவ்வொருவரும் தங்கள் பணத்திற்கான குறைந்தபட்ச உத்தரவாதத்தை எதிர்பார்ப்பர் அல்லவா!
தற்போது ஐரோப்பிய யூனியனில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்கா, அவற்றிற்கிடையே ராணுவ ரீதியிலான ஒருங்கிணைப்பின்மை, சீன யுவானின் முதிர்ச்சியின்மை மற்றும் தனது ராணுவ பலம் ஆகியவற்றின் மூலம் தனது டாலரின் உலக சேமிப்பு நாணயமாக அந்தஸ்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது. 21ம் நூற்றாண்டின் மத்தியில் டாலர் தனது செல்வாக்கை இழந்து விடும் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கணிப்பாகவே தெரிகிறது.
5 comments:
hi siva, it is very nice. keept it up.
Hi super kallakeetenga ponga..... Keep it up......
Your articles really super..... I like it
// அது தன் பொருளாதாரத்தை காக்க, டாலரை உலக சேமிப்பு நாணயமாக நிலைநிறுத்த போரில் ஈடுபடவும் தயங்காது என்பதையே இது காட்டுகிறது.//
இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் சுயநலத்துக்கபக ஒரு மாநிலத்தையை அழிப்பான்
hai siva very very super da, i am not expected in articles. so, continue try.
Post a Comment